Tuesday 3 April 2018

சுரைக்காய்


சுரைக்காய்
 

நமக்கு எளிதிலே, அருகிலே கிடைக்கின்ற மூலிகைகள், தோட்டங்களில் விளைகின்ற காய்கறிகள், வீட்டு சமையலறைகளில் உள்ள மளிகை பொருட்களை கொண்டு எளிதான முறையில் நாட்டு மருந்து தயாரித்து பலனடைவது பற்றி பார்த்து வருகிறோம். அந்தவகையில் உடல் பருமனை குறைக்கும் சுரைக்காய் மற்றும் மாவு சத்து நிறைந்த பச்சை துவரையின் பயன்கள் பற்றி பார்க்கலாம்.
.
சுரைக்காயின் உள் சதைப் பகுதியை அகற்றிவிட்டு, தேன், உள்ளிட்ட மருந்து வகைகளை இன்றுவரை மருந்து கடைகளில் ஊற்றி வைப்பது வழக்கமாக உள்ளது. சுரைக்காயானது தேவையற்ற நீரை உடலிலிருந்து சிறுநீராக வெளியேற்றும் தன்மை கொண்டது. அதோடு நரம்புக்கு பலம் தருகிறது, சீதள நோய்க்கு மருந்தாகிறது. வயிற்று கோளாறுகளை சீர் செய்கிறது. சுரைக்காய் இலைகள் கூட மேல்பூச்சு மற்றும் உள் மருந்தாக பயனளிக்கிறது. 
.
உடல் எடையை குறைக்கும் சுரைக்காய் பிஞ்சு பொரியல் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சுரைக்காய்பிஞ்சு (நறுக்கியது), வேர்க்கடலை, வரமிளகாய், பூண்டு கலவை, உப்பு, கடுகு, நல்லெண்ணெய்.வானலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, வேகவைத்த சுரைக்காய் சேர்க்கவும். நன்கு வதங்கியதும் சிறிது உப்பு, அரைத்த வேர்கடலை, வரமிளகாய், பூண்டு கலவை சேர்த்து கிளறவும். இதனை உணவுடன் சாப்பிடுவதால் மிகுந்த சுவை தருவதோடு, உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்புகளை அகற்றுகிறது. மேலும் உடலில் உள்ள தேவையற்ற நீரினை வெளியேற்றி உடல் பருமனை குறைக்கிறது. 


சுரைக்காயில் விட்டமின்கள் ஏ, சி, பி1, பி2, பி3, பி5, பி6, ஃபோலேட்டுகள் போன்றவை காணப்படுகின்றன. மேலும் இக்காயில் தாது உப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம், அதிக அளவு  பொட்டாசியம், குறைந்தளவு சோடியம் போன்றவை உள்ளன.

 இதில் கார்போஹைட்ரேட்டுகள், புரதம், குறைந்த அளவு எரிசக்தி, அதிகஅளவு நார்சத்து ஆகியவை உள்ளன. இக்காயானது 96  சதவீதம் நீர்சத்தினைப் பெற்றுள்ளது.
 
நல்ல செரிமானம் மற்றும் வயிற்றுப் பிரச்சினைகளை தீர்க்கும். சுரைக்காயானது அதிக அளவு நார்சத்தினைப் பெற்றுள்ளது. இந்த நார்சத்தானது செரிமானம் நன்கு நடைபெறச் செய்கிறது. மேலும் உடலானது ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது.
 
குடலில் உள்ள நச்சுப்பொருட்களை கழிவாக வெளியேற்றுவதிலும் நார்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இக்காயில் உள்ள நார்சத்து மற்றும் நீர்சத்து மலச்சிக்கல், செரிமானமின்மை, வாயு தொந்தரவு ஆகியவை ஏற்படுவதையும்  தடைசெய்கின்றது.
 
சுரைக்காயானது அதிக அளவு நீர்ச்சத்துடன் குறைந்தளவு எரிசக்தியையும், உடலுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இதனால் இக்காயை உண்ணும்போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதுடன் குறைந்த அளவு எரிசக்தியும்  கிடைக்கிறது.
 
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இக்காயினை அடிக்கடி உணவில் எடுத்துக் கொண்டு உடல் எடையைக்  குறைப்பதோடு ஆரோக்கியத்தையும் பெறலாம்.
 
சுரைக்காயினை வாங்கும்போது மேல்தோலை நகத்தினால் கீறினால் மேல்தோல் எளிதாக வரவேண்டும். இக்காயனது இளம்பச்சை வண்ணத்தில் இளமையானதாக அளவில் பொதுவானதாக இருக்க வேண்டும்.

.
பொரியலாக அவ்வப்போது உணவுடன் எடுத்து கொள்வதால் வயிற்று புண்களை விரைந்து குணப்படுத்துகிறது. உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. சுரைக்காயை அதிகமாக சாப்பிட்டால் கரப்பான் போன்ற நோய்கள் வரவும் வாய்ப்புள்ளது.உடலுக்கு வலுசேர்க்கும் பச்சை துவரை சுண்டல் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய், பெருங்காயப்பொடி, கடுகு, உளுந்தம் பருப்பு, வரமிளகாய், சின்ன வெங்காயம் (நறுக்கியது), வேகவைத்த பச்சை துவரை, தேங்காய் துருவல்.
.
வானலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு தாளிக்கவும். இதனுடன் பெருங்காயப்பொடி, வரமிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் வேகவைத்த பச்சை துவரை சுண்டல், தேங்காய் துருவல் சேர்த்து கிளறி எடுக்கவும். மணமும், சத்தும் நிறைந்த பச்சை துவரை சுண்டல் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது.துவரம் பருப்பு என்று சமையலுக்கு பயன்படுத்தும் இந்த பச்சை துவரையில் மாவு சத்து அதிகம் உள்ளது. இதில் இரும்பு, நார்சத்து, வைட்டமின், மினரல்ஸ், செரிமானத்துக்கு தேவையான அமிலம், கால்சியம், மெக்னீசியம் உள்ளிட்ட தாது உப்புக்களும் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளித்தள்ளும் சிறந்த சமனியாக இருக்கிறது. இதில் போலிக் அமிலமும் அதிகம் இருப்பதால் உடலில் ரத்த சோகை நிலையை தடுக்கிறது.
.
வயிறு பொருமல், பெரும் ஏப்பத்தை சரிசெய்யும் தேநீர் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தனியா பொடி, நெல்லி வற்றல் பொடி, சந்தனப்பொடி, நீர். பாத்திரத்தில் ஒரு கப் நீர் விட்டு, அதனுடன் ஒரு ஸ்பூன் தனியா பொடி, அரை ஸ்பூன் நெல்லி வற்றல் மற்றும் அரை ஸ்பூன் சந்தனப்பொடியை சேர்த்து கொதிக்கவிடவும். பின் இந்த தேநீரை வடிகட்டி அருந்துவதால் இரவு பகலாக மூச்சு முட்டல், மார்பு வலி என தொல்லை ஏற்படுத்தும் வயிறுபொருமல், பெரும் ஏப்பம் போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாகிறது. அடிக்கடி இந்த தேநீரை பருகி வரும்போது இத்தகைய உடல் உபாதைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

No comments:

Post a Comment